தமிழக ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.விஸ்வநாதன் மாத அறிக்கையும், பொருளர் டி.ராதாகிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர்.
கூட்டத்தில், அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்தியதற்கான அரசாணயை வெளியிட வேண்டும். அரசு அறிவித்தபடி ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நோயாளிகள் விரும்பும் மருத்துவமனையை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும்.
இறப்புக்கான ஈமச்சடங்கு முன்பணமாக ரூ.10 ஆயிரம், 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பண்ருட்டி, திருவதிகையில் நவ.20ஆம் தேதி சங்கத்தின் மாநில செயற்குழுவை கூட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் த.சண்முகசுந்தரம், ஆர்.ராதாகிருஷ்ணன், பாபுசுப்ரமணியம், ஆர்.தனராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக துணைத் தலைவர் புலவர் ஆர்.திருநாவுக்கரசு வரவேற்க, உதவி செயலர் வி.முத்துவேல் நன்றி கூறினார்.