சிதம்பரம் நடராஜர் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா அக்.31-ஆம் தேதி தொடங்கி நவ.6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நடராஜர் கோயில் மேலகோபுர வாயிலில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா உடனுறை முத்துக்குமரப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா அக்.31-ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்குகிறது.
தினம்தோறும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை முத்துக்குமரப் பெருமான் சன்னதியில் தில்லை திருமுறை மன்றத்தார் சார்பில், தேவார பரிசு விண்ணப்பமும், உரை விளக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மேலும், முருகன் பெருமைகள் குறித்து சொற்பொழிவுகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நவ.5-ஆம் தேதி சனிக்கிழமை மாலை செங்குந்த நவவீரர் வீதி வலம் வருதல்
நிகழ்ச்சியும், இரவு நடராஜர் சன்னதியில் செல்வமுத்துக்குமரப் பெருமான் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், சிதம்பரம் தெற்கு
ரதவீதியில் மகா சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பின்னர், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் வெற்றி வேலாயுதப் பெருமான், தில்லைவாழ் அந்தணர் மற்றும் செங்குந்த நவவீரர் புடை சூழ வீதிவலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நவ.6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடராஜர் கோயில் தேவசபையில் வேடமங்கை வேழமங்கை வேலவர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.