கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் சனிக்கிழமை தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவப் பணிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன.
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த ஒதுக்கீட்டினை அண்மையில் நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே, மீண்டும் இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடலூர் மாவட்டத்தில் 7 அரசுத் தலைமை மருத்துவமனைகள், 65 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் வியாழக்கிழமை காலை 2 மணி நேரம் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை புறக்கணித்தனர். வெள்ளிக்கிழமை முதல் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், சனிக்கிழமை 2-ஆவது நாளாக 13 வட்டார தலைமை மருத்துவமனைகள், 53 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டது.