வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப்.25) நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் பிரச்னையில் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட வலியுறுத்தி, திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகள் சார்பில் வரும் 25-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு கட்சிகளும் போராட்டத்துக்கான ஆதரவு தளத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் கடலூரில் கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கோரி
பொதுமக்களிடம் சனிக்கிழமை துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் இல.திருமேனி, மாநில நிர்வாகிகள் சுபாஷ், முரளி, செந்தில்குமார், நகரச் செயலர் மு.செந்தில், மாணவர் அமைப்பு செல்வ மணிகண்டராஜா, நிர்வாகிகள் ஜெயக்குமார், புருஷோத்தமன், ஆட்டோ சங்கத் தலைவர் ஆசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.