விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்து வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப்.25) நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக, கடலூர் திருப்பாதிரிபுலியூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏஐடியூசி மாவட்டத் தலைவர் என்.மாரியப்பன் தலைமை வகித்தார். தொமுச நிர்வாகி தங்க.ஆனந்தன், செயலர் சி.சுகுமார், சிஐடியூ மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், செயலர் பி.கருப்பையன், ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலர் பி.துரை, மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரா ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஏப்.25-இல் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, ஹரியானா மாநிலத்தில் மாருதி கார் தொழிற்சாலையில் சங்கம் வைத்த காரணத்துக்காக 148 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டிப்பது, வறட்சி, கடன் சுமையாலும் பரிதவிக்கும் விவசாயிகளைக் கண்டுகொள்ளாத மத்திய-மாநில அரசுகளைக் கண்டிப்பது, இறந்து போன விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.