கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.சி. சம்பத், டிஐஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் அமைச்சர்கள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்கிறார்கள்.
இதற்காக, விழா மேடை, பொதுமக்கள் அமரும் பந்தல், வரவேற்பு வளைவுகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடலூரில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் விழா நடைபெறும் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது.
அந்தத் தண்ணீரை வடிய வைக்கும் பணி வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது. இந்தப் பணியை அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் வெ.பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்பு
மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ், அமைச்சர் எம்.சி.சம்பத், காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மைதானம் முழுவதையும் இந்தக் குழுவினர் சுற்றிப்பார்த்தனர்.
ஆய்வின் போது மாட்வட்ட திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், கடலூர் நகராட்சி ஆணையர் செ.விஜயகுமார், அதிமுக நிர்வாகிகள் முருகுமணி, ஆர்.குமரன், ஜெ.குமார், பெருமாள்ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.