நெய்வேலியில் மாநில அளவிலான மேஜைப் பந்துப் போட்டி, வட்டம்-25, லிக்னைட் நகர்மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி நகர் மன்றமானது, என்எல்சி விளையாட்டுக் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தின் அனுமதியுடன் என்எல்சி இந்தியா நிறுவனம் 5-ஆவது மாநில தகுதி அளவிலான மேஜைப் பந்தாட்டப் போட்டி-2017 -ஐ கடலூர் மாவட்ட மேஜைப் பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடத்துகிறது.
இந்த ஆண்டு 10, 12 வயதுக்குள்பட்ட மாணவ-மாணவிகள், 15 வயதுக்குள்பட்ட சப்-ஜூனியர், 18 வயதுக்குள்பட்ட ஜூனியர், 21 வயதுக்குள்பட்ட இளைஞர் மற்றும் பெண்கள் மற்றும் அனைத்து வயதினரை உள்ளடக்கியது உள்பட 12 போட்டிகளை நடத்துகிறது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோர், இரண்டாம் நிலை பெறுவோர், அரை இறுதி மற்றும் கால் இறுதிக்கு தேர்வு பெறுவோருக்கு ரொக்க விருதும், கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வரும் சி.ஆர்.ஹர்ஷவர்த்தினி, செலெனா தீப்தி, டி. ஆனந்த் மற்றும் ஆர்.விஸ்வா ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநர்கள் ஆர்.விக்ரமன், சுபீர்தாஸ் ஆகியோர் போட்டிகளை தொடக்கி வைத்தனர். இயக்குநர் பி.செல்வக்குமார் உடனிருந்தார். போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.