கரும்புக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.
கடலூரில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்பாட்டில் உள்ளது. மாவட்ட அளவில் அனைத்து சுகாதார நிலையங்களும் முழுமையாக இயங்கி வருகின்றன. 20-6-1982-இல் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் எம்ஜிஆரால் ஜெயலலிதா அரசியலுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். பெண்ணின் பெருமை என்ற தலைப்பில் ஜெயலலிதா அந்தக் கூட்டத்தில் பேசினார். இதனை நினைவுக்கூரும் வகையில் ஜெயலலிதாவுக்கு நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து முதல்வரின் கவனதுக்கு கொண்டு செல்லப்படும். சிதம்பரத்தில் நடைபெற்று வரும் சுவாமி சகஜானந்தா மணிமண்டபத் திறப்பு விழாவின் போது, இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ரூ.212 கோடி பாக்கி வைத்துள்ளன. அரசின் வழிவகை கிடைக்கப்பெற்றவுடன் இத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதே நேரத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் மாநில அரசின் பரிந்துரை விலையை விவசாயிகளுக்கு வழங்காமல் பாக்கி வைத்துள்ளன. இதுகுறித்து சர்க்கரை ஆலைகளுக்கு பலமுறை அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழங்குவதாக கூறி விட்டு பின்னர் வழங்கவில்லை. எனவே, விரைவில் முதல்வர் தலைமையில் சர்க்கரை ஆலை உரிமையாளர்களுடனான கூட்டம் நடத்தப்படும். அதில் விவசாயிகளுக்கு சாதகமான பதில் பெற்றுத்தரப்படும். பாதகமான பதில் கிடைக்கப்பெற்றால் சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.