அண்ணா விருது பெற்ற காவலர்களை மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார் பாராட்டினார்.
தமிழகக் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை பாராட்டும் விதமாக தமிழக அரசு சுதந்திர தினத்தன்று அண்ணா விருதை வழங்கி வருகிறது. அதன்படி செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் தாமஸ்வில்லியம் தாஸ், எஸ்.தேவகிருஷ்ணன், புகைப்பட நிபுணர் பி.மோகன்ராஜ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்ணா விருதை வழங்கினார். விருது பெற்றவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் வியாழக்கிழமை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
விருது பெற்ற தாமஸ்வில்லியம் தாஸ், தேவகிருஷ்ணன் ஆகியோர் டெல்டா பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இதில் தாமஸ் கடந்த 2007-ஆம் ஆண்டு நெய்வேலியில் நடைபெற்ற தொடர் நகைப் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது, தென்குத்தில் நடக்கவிருந்த கலவரத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் செயல்பட்டது, 2011-ஆம் ஆண்டில் சிறுமி காணாமல் போன வழக்கில் அவரை கொலை செய்தவர்களை கைது செய்ததில் முக்கிய பங்காற்றியதற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார்.
தேவகிருஷ்ணன், 2012-ஆம் ஆண்டு காடாம்புலியூர் அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை சென்னைக்குச் சென்று கைது செய்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதன் மூலமாக ரூ.80 லட்சம் மதிப்பிலான நகை உள்ளிட்டவை தமிழகம், புதுச்சேரி பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டது.
அதேபோல குற்றச் சம்பவங்களை புகைப்படம், வீடியோ எடுத்து ஆவணப்படுத்தும் பி.மோகன்ராஜின் புகைப்படங்கள், பல்வேறு வழக்குகளில் துப்பு துலங்குவதற்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் உதவியாக இருந்ததற்காக இந்த விருதை அவர் பெற்றுள்ளார்.