சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா, பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் வேளாண் சங்க துணைத் தலைவர் க.சேகர் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் விழாவை தொடக்கி வைத்துப் பேசியதாவது:
படிப்பு, ஆராய்ச்சி மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் உயர்ந்த இடங்களைப் பெறும் தரத்திலான மாணவர்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது என்றார்.
மேலும், இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, விவசாயத் துறை மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருப்பதாகக் கூறினார்.
வேளாண்புல முதல்வர் மு.ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசுகையில், வேளாண் மாணவர்களுக்கான பல்வேறு வாய்ப்புகள் குறித்து விளக்கினார். விழாவில் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். அவர் பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சிக்கல்களை தீர்த்த தமிழக அரசைப் பாராட்டினார். மேலும், அரசு இந்தப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை ஏற்றதால்தான் இங்கு தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக தெரிவித்தார்.
ஆட்சிமன்ற குழு உறுப்பினர் எம்.உமாமகேஸ்வரன், இந்திய மொழிப்புல முதல்வர் வி. திருவள்ளுவன், வேளாண்புல முன்னாள் மாணவரும், கார்ப்பரேசன் வங்கி துணைப் பொது மேலாளருமான எம்.செல்லதுரை ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.
ஒருங்கிணைப்பாளர் வி.அன்பானந்தன் நன்றி கூறினார்.