பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் வேளாண்புல அலுவலகம், பொறியியல் புல அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
அனைத்து ஆசிரியர்களுக்கும் நிலுவையில் உள்ள மதிப்பூதிய ஊக்கத் தொகை, பதவி உயர்வை வழங்க வேண்டும், மாத இறுதி நாளில் சம்பளம், பல்வேறு நிலுவைத் தொகைகள், பி.எஃப், சி.பி.எஃப் கணக்குகளில் எடுக்கப்பட்ட பணத்தை மறு டெபாசிட் செய்தல், மீள்பணியுரிமை, பணிநிரவலில் சென்றவர்களுக்கு அடிப்படை உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் வருடாந்திர ஊக்கத் தொகை, ஓய்வுபெற்ற அனைவருக்கும் வழங்க வேண்டிய பணப் பலன்களை வழங்குதல், ஆசிரியர் ஊழியர் ஊதியத்தில் பிடிக்கப்பட்ட மாதாந்திரக் கடன் தவணைகள், எல்ஐசி, கூட்டுறவு சொசைட்டி தவணைகளை 3 மாதங்கள் தாமதித்து செலுத்தும் நடைமுறையை திருத்துதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள் பி.சிவகுருநாதன், ரா.உதயசந்திரன், சி.சுப்ரமணியன், துரை அசோகன், இரா.செல்வகுமார், வி.இமயவரம்பன், தனசேகரன், முத்து வேலாயுதம்,ஜெய்சங்கர், ரமேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.