மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளைக் கண்டித்து, கடலூர் மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் கடலூர் மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 18 முதல் 22-ஆம் தேதி வரை கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெறுகிறது.
விவசாயக் கடன் தள்ளுபடி, சாகுபடி செலவை விட கூடுதலாக 1.5 மடங்கு ஆதார விலை தீர்மானித்து சட்டமியற்றுவது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்ற பாஜகவின் வாக்குறுதியை அமல்படுத்த வலியுறுத்துவது, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிடுதல், ஜிஎஸ்டி மூலம் உயர்த்தப்பட்ட வரிகளை திரும்பப் பெறுதல், பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுதல், மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டத்தை மக்களின் கருத்தை அறியாமல் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பிரசார இயக்கத்தில் வலியுறுத்தப்படும்.
இதற்காக கட்சியின் சார்பில் 500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவும் 300 குடும்பங்கள் வீதம் மாவட்டம் முழுவதும் மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்படும். வருகிற 23-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி 200 இடங்களில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.