சிதம்பரத்தில் கார் கண்ணாடியை உடைத்து 18 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா, சட்டநாதபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி கலைச்செல்வி. விஜயகுமார் சிங்கப்பூரில் உள்ளார்.
இந்த நிலையில் கலைச்செல்வி வந்தவாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க, தனது உறவினர்களுடன் சீர்காழியிலிருந்து காரில் புறப்பட்டு வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்றபின் வியாழக்கிழமை பிற்பகலில் சிதம்பரம் வழியாக ஊருக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, சிதம்பரம் வடக்குரத வீதியில் உள்ள உணவு விடுதிக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு, உள்ளே சென்று உணவு சாப்பிட்டுள்ளனர்.
பின்னர், திரும்பிவந்து பார்த்தபோது காரின் பின்புறக் கண்ணாடி உடைக்கப்பட்டு 18 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்ததாம்.
இதுகுறித்து கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.