சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிச.24-இல் தொடக்கம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வருகிற 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
 இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன.
 அதன்படி நிகழாண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிசம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உற்சவ ஆச்சாரியார் சி.க.கனகசபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைக்கிறார்.
 இதையடுத்து, 28-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 29-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலாவும், 30-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதிஉலா வருகிறார். ஜனவரி 1-ஆம் தேதி தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
 2-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
 தொடர்ந்து, காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 3-ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
 விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலர் ச.ராஜகணபதி தீட்சிதர், துணைச் செயலர் என்.ஆர்.சண்முக தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர். விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித் சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com