இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் தேர்வு
இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவுக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடலூரில் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் குறித்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில், கடலூர் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.கலையரசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து சட்டப் பேரவை தொகுதி தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி ஆர்.எஸ்.வி.குமார் (கடலூர்), பி.கே.கராத்தே வெங்கடேசன் (பண்ருட்டி), கே.கலைச்செல்வன் (குறிஞ்சிப்பாடி), செல்வநாதன் (நெய்வேலி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும், மாவட்ட பொதுச் செயலர்களாக 10 பேரும், துணைத் தலைவர்களாக ஸ்ரீதர்பழனி, பாலமுருகன் ஆகியோரும் தேர்வாகினர்.
இதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் கட்சியின் மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் கடலூரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் டி.ராம்ராஜ், மீனவரணி கார்த்திக், வட்ட துணைத் தலைவர் ராஜாராம், நிர்வாகிகள் உமாபதி, அன்பழகன், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.