பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.ஜாகிர்உசேன் தலைமை வகித்தார். மமக (வ) மாவட்டச் செயலர் வி.எம்.ஷேக்தாவூத் தொடக்க உரையாற்றினார்.
இஸ்லாமிய பிரசார பேரவை மாநில துணைச் செயலர் எம்.முஸ்தபா, தி.க. பொதுச் செயலர் துரை.சந்திரசேகர், திமுக தேர்தல் பணிக்குழுச் செயலர் இள.புகழேந்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ வி.அப்துல்நாசர், தவாக மாநில நிர்வாகி ரவி.பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமுமுக நிர்வாகிகள் அசன்முகமது, ஏ.எச்.தமீம் அன்சாரி, அசீம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், பிறகு அனுமதி வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் சிலர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மனித நேய ஜனநாயகக் கட்சி: இதேபோல, மனித நேய ஜனநாயகக் கட்சியினர் பண்ருட்டி ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் இருந்து மாவட்டத் தலைவர் எம்.இப்ராஹிம் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்தனர். ரயில் நிலையம் அருகே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மாநிலச் செயலர் எச்.ராசுதீன் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட பொருளாளர்கள் சலீம், முஹம்மது, துணைச் செயலர்கள் அஜ்மீர்கான், கியாசுதீன், முஹம்மது யூசுப், பண்ருட்டி நகரச் செயலர் பீர் முஹமது கான், பொருளாளர் அப்துல் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.