ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு மீனவர் பேரவை வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தப் பேரவையின் கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், புதுவை மாநில தலைவர் மலை.தர்மலிங்கம் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒக்கிப் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு தீவுகளிலும், மாநிலங்களிலும் படகுகளுடன் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தாருக்கும் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசு தலா ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கியது. இதேபோல, தமிழக அரசும் வழங்க வேண்டும். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
உயிரிழந்த மீனவர்களின் குடும்பதுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தினர்.