தமிழகத்தில் 299 கிராம ஊராட்சிகளைப் பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட 3-ஆவது மாவட்ட மாநாடு விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஸ்ரீரவிக்குமார், அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன், திட்டக்குடி வட்டத் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலர் அருள்குமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
கூட்டத்தில், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 299 கிராம ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாகத் தரம் உயர்த்த வேண்டும். ஊழியர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிடும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் சரவணவேல், மாவட்டத் துணைத் தலைவர் மகேஸ்வரி, பொறியாளர் சங்க நிர்வாகி அன்புக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமானுஜம், நாட்டுதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட இணைச் செயலர் செல்வராஜ் வரவேற்க, மாவட்ட இணைச் செயலர் பழனிசாமி நன்றி கூறினார்.