வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை என்எல்சி இந்தியா நிறுவனம் நிறைவேற்ற வேண்டும் என நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா. ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: என்எல்சி சுரங்கம் 1-ஏ-இல் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நாள்களை 19-ஆக குறைத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு 26 நாள்கள் பணி வழங்க வேண்டும் எனக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரம் கேட்டு போராடி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்போது பணிக்காக போராட வேண்டிய நிலை பரிதாபமானது. எனவே, என்எல்சி நிர்வாகம் லாப நோக்கத்தை மட்டும் கருத்தில்கொள்ளாமல், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அவர்களின் நியாயமான கோரிக்கையான 26 நாள்கள் பணி கோரிக்கையை ஏற்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.