ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வருகிற 18-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், ஆகஸ்டு 5-ஆம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணியும் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது என, அதன் கடலூர் மாவட்டச் செயலர் மு.செல்லசாமி கூறியுள்ளார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பானது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தைப் புறக்கணிக்கிறது. எனவே ஆர்ப்பாட்டத்தில் சங்கம் பங்கேற்காது. அதேநேரம், ஆகஸ்டு 4-ஆம் தேதி சங்கத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் தமிழகம் தழுவிய உண்ணாவிரதத்தில் அமைப்பினர் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.