கடலூரில் 108 அவசர ஊர்தி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
கடலூரில் இயங்கி வந்த 108 அவசர ஊர்தி பழுது காரணமாக சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் பகுதியில் தனியார் பழுது நீக்கும் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை திடீரென அந்த வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
சிப்காட் தீயணைப்பு - மீட்புப் படையினர் விரைந்து வந்து வாகனத்தில் பரவிய தீயை அணைத்தனர். எனினும், அவசர ஊர்தி முழுவதும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மண்டலப் பொறுப்பாளர் ஜெ.சார்லஸ் (35) கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குளிர்சாதனத்துக்கு செல்லும் வயர்கள், பேட்டரியில் ஏற்பட்ட கோளாறினால் தீப்பிடித்து தெரிய வந்தது. தொடர்ந்து, காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.