கடன் தொல்லையால் இரு குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய் கைது

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கடன் தொல்லையால் மனமுடைந்த தாய், தனது இரு மகன்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கடன் தொல்லையால் மனமுடைந்த தாய், தனது இரு மகன்களை கிணற்றில் வீசி கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் குறிஞ்சிப்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 கடலூர் முதுநகர் அருகே உள்ள கோதண்டராமபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சாய்பாபு (35) (படம்). இவர்களது மகன்கள் கோஷன் (7), கோகுல் (6).
 கோதண்டராமபுரத்தில் தனியாக வசித்து வந்த சாய்பாபு குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தாராம்.
 மேலும், குழந்தைகளின் படிப்பு, குடும்பச் செலவுக்கு உறவினர்கள், தெரிந்தவர்களிடம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
 கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளனர். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சாய்பாபு மன வேதனையில் இருந்து வந்தாராம்.
 கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு, குள்ளஞ்சாவடி அருகே சின்ன ராவுத்தன்குப்பம் கிராமத்தில் உள்ள நாத்தனார் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். திங்கள்கிழமை காலை தனது இரு மகன்களை அழைத்துக் கொண்டு சின்ன ராவுத்தன்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் நிலத்துக்குச் சென்றவர், அங்கிருந்த கிணற்றில் கோஷன், கோகுல் ஆகியோரை தள்ளிவிட்டு, பின்னர் அவரும் கிணற்றுக்குள் குதித்துவிட்டாராம்.
 இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து மூவரையும் மீட்டனர். இதில், கோஷன், கோகுல் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். சாய்பாபு உயிருடன் மீட்கப்பட்டார்.
 தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீஸார் அங்கு வந்து கோஷன், கோகுல் ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இதுகுறித்து குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளர் கண்ணன் வழக்குப் பதிந்து, சாய்பாபுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com