கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 398 மனுக்கள் வரப் பெற்றன.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமை வகித்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்து பொதுமக்கள் அளித்த 398 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் சென்று அவர்களிடம் மனுக்களைப் பெற்றார்.
பொதுமக்கள் அளித்த மனுக்களைத் தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உள்பட்டும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலர் ராமு, மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் மதிவாணன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.