கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தம்பதி சிறை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது மனு அளிப்பதற்காக மாற்றுத் திறனாளி தம்பதியான ராசாப்பேட்டையைச் சேர்ந்த சிவபாலன், இலக்கியா வந்திருந்தனர்.
அவர்கள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட எந்த விதமான உதவித் தொகையும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கிடைக்கவில்லை என மனு அளிக்க வந்திருந்தனர்.
ஆனால், அவர்களை மனு அளிக்க விடாமல் மாற்றுத் திறனாளி நல அலுவலக அலுவலர்கள் ஒரு அறையில் நிகழ்ச்சி முடியும் வரை பூட்டி சிறை வைத்ததாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாற்றுத் திறனாளி அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், கடலூரைச் சேர்ந்த மனித உரிமைக் காப்பாளர் இரா.பாபு, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினார்.
அந்த மனு தொடர்பாக மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.