எம்.எல்.ஏ.க்கான அலுவலகத்தில் நடந்த திமுக கூட்டத்தால் சர்ச்சை
எம்.எல்.ஏ.க்கான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த திமுக கூட்டத்தால் சர்ச்சை ஏற்பட்டது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் பணிச் செயலர் இள.புகழேந்தி முன்னிலை வகிக்க, மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நிரந்தரமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை (ஜூலை 27) மாலை 4 மணி முதல் 5 மணி வரை கடலூரில் பேருந்து நிலையம் அருகில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
பொதுவாக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் என்பது அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் வந்துச் செல்லும் பொது இடமாகும்.
அந்த இடத்தில் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை நடத்தியது எதிர்க்கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.