நெய்வேலி அருகே 10 பவுன் நகை கொள்ளைபோன சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்பட 5 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
நெய்வேலி அருகே உள்ள தென்குத்து கிராமம், கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (64). ஒப்பந்ததாரர். இவரது மனைவி மணிமேகலை (55). இருவரும் கடந்த மே 15-ஆம் தேதி இரவு வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, திறந்திருந்த மாடிக் கதவு வழியாக முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து, தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை தருமாறு கேட்டனர். அதற்கு, மணிமேகலை மறுக்கவே அவரை கத்தியால் குத்திவிட்டு, அவர் அணிந்திருந்த சுமார் 10 பவுன் தங்க நகை, ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசுகளை கொள்ளையடித்துக்கொண்டு தப்பினர். சம்பவம் தொடர்பாக நெய்வேலி நகரிய போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு நெய்வேலி, வேலுடையான்பட்டு கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 5 பேரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் சேப்பளாநத்தத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பாரதிராஜா (33), இளையராஜா (28), திருவாரூர் தாமோதரன் (34), காரைக்கால் பாஸ்கரன் (43), அயன்குறிஞ்சிப்பாடி ரகுபதி (24) எனத் தெரிய வந்தது. விசாரணையில் இவர்கள், சுந்தரமூர்த்தி வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனராம். இதையடுத்து 5 பேரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 9 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.