கடலூர் எஸ்.என்.சாவடி, கண்ணையாநகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தகவல் பெயர்ப் பலகை திறப்பு விழா மற்றும் சங்கக் கூட்டம் அண்மையில் சங்கத் தலைவர் க.ஜெயவீரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன், பொதுச் செயலர் மு.மருதவாணன் ஆகியோர் தகவல் பெயர்ப் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
சங்கக் கூட்டத்தில், நகரில் அனைத்துத் தெரு விளக்குகளையும் சரியாக எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தார்ச் சாலை இல்லாத பகுதிகளில் சாலை அமைத்தல், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பையில்லா பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை, வெள்ளக் காலத்தில் தண்ணீர் வடியும் வகையில் வடிகால் அமைத்தல், சாவடி மற்றும் செம்மண்டலத்தில் போக்குவரத்து ரவுண்டானா அமைத்தல், கம்மியம்பேட்டை கெடிலம் தடுப்பணையில் தனியார் சர்க்கரை ஆலை கழிவுநீர் கலக்காமலிருக்க நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, சங்கச் செயலர் கு.கண்ணபிரான் வரவேற்க, பொருளர் இரா.தர்மன் நன்றி கூறினார்.