கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கள்ளச்சாராய சோதனையின்போது, கிராம மக்கள் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி வட்டம், திருவாமூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சினி மகன் இளையராஜ் (26). பி.எஸ்ஸி., பட்டதாரியான இவர் ஞாயிற்றுக்கிழமை திருவாமூர் அய்யனார் கோயிலில் அமர்ந்திருந்தார்.
அப்போது, பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவடிவேல் தலைமையிலான போலீஸார் அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை குறித்து சோதனையிடச் சென்றனர்.
அப்போது, சீருடையில் இல்லாத காவலர் ஒருவர் இளையராஜாவிடம் சாராயம் எங்கு விற்பனை செய்யப்படுகிறது? எனக் கேட்டாராம். அதுகுறித்து தனக்கு தெரியாது என இளையராஜா கூறினாராம். அதற்கு அந்தக் காவலர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், போலீஸாரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, கிராம மக்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த பண்ருட்டி டிஎஸ்பி சுந்தரவடிவேல் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் விசாரணை எதுவும் செய்யாமல் கிராம மக்கள் மீது திடீரென தடியடி நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.