சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் உலக குருதிக் கொடையாளர் தின விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தலைமை மருத்துவர் தமிழரசன் தலைமை வகித்து, ரத்த தானத்தின் அவசியம் குறித்துப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், தன்னார்வ ரத்த தானக் கழக மாநிலச் செயலர் கடலூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று ரத்த தானம், உடல் தானம் மற்றும் கண் தானத்தின் அவசியம் குறித்து உரையாற்றினர்.
தொடர்ந்து ரத்த தானம் வழங்கி வரும் எஸ்.ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். கூட்டத்தில் தலைமை செவிலியர் சுந்தரி, இளநிலை உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.