தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு முகாம் தொடக்கம்: 2 வாரங்கள் நடைபெறுகிறது

கடலூர் மாவட்ட பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு விழிப்புணர்வு குறித்த

கடலூர் மாவட்ட பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு விழிப்புணர்வு குறித்த இரு வார முகாம் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை அங்கன்வாடி மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
 முகாமை மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: நமது நாட்டில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 10 சதவிகித குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றனர். இதை தடுக்கவே தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்பாட்டு இருவார முகாம் நடைபெறுகிறது.
 இந்த முகாம் மூலமாக கடலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட சுமார் 2,48,286 குழந்தைகள் பயனடைவார்கள். அதற்கு தேவையான ஓஆர்எஸ் மற்றும் துத்தநாக மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. இந்த முகாம் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியார் குழந்தை நல சிறப்பு மருத்துவமனை ஆகிய மையங்களில் உப்புக்கரைசல் நீர் வயிற்றுப்போக்கு ஏற்படும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் வீடு, வீடாகச் சென்று 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் பாக்கெட் வழங்கப்படவுள்ளது. குழந்தைக்கு உணவூட்டுவதற்கு முன்பும், மலம் கழுவிய பின்னரும் தாய்மார்கள் தங்களது கைகளை சோப்புப் போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டு, சத்து குறைவான குழந்தைகளை அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சிகிக்சை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
 பிறந்த குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் 6 மாத காலம் வரை தாய்ப்பால் ஊட்டுதல், 6 மாதங்களுக்குப்பின் இணை உணவு வழங்கும் முறையை பின்பற்றுதல் தொடர்பாகவும் விழிப்புணர்வு அளிக்கப்படும். பள்ளிக் குழந்தைகளிடையே கை கழுவுதல் முறைகள் விளக்கிக் காட்டப்படும். கை கழுவுதல் என்பது 20 முதல் 30 விநாடிகள் வரை சோப்பை கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்தல் வேண்டும். அப்போதுதான் நம் கைகளில் உள்ள கிருமிகள் அழிந்து வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
 மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து நீர்நிலை தொட்டிகளிலும் பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்து தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் வருவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும் என்றார் ஆட்சியர்.
 நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவஹர்லால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தேசிய சுகாதார இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரிமேலழகன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com