நலிவுற்ற கலைஞர்களுக்கு நல உதவி

கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், நலிவுற்ற கலைஞர்களுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், நலிவுற்ற கலைஞர்களுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 338 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
 மாற்றுத் திறனாளிகளுக்கென மனுக்கள் பெறுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
 கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில், நலிவுற்ற கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 30 கலைஞர்களுக்கு தலா ரூ.1,500-க்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். மேலும், மருத்துவம், ஊரக நலப் பணிகள் மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எள்ளேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்புநர் ஆர்.உமாராணிக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.
 பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் அங்கன்வாடி மையங்களில் பணிபுரிபவர்களுக்கு கை கழுவும் முறை, தாய்ப்பாலின் நன்மைகள், தாய்ப் பாலூட்டுதலின் சரியான நிலைகள், சீம்பாலின் நன்மைகள், வயிற்றுப் போக்கால் குழந்தை சேர்வடைந்தால் என்ன செய்ய வேண்டும் போன்ற தகவல்கள் அடங்கிய கையேடுகளையும் ஆட்சியர் வழங்கினார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ், தனித் துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் மதிவாணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com