அதிமுக பிரமுகரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வடலூர், ஜோதிநகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (41). அதிமுக பிரமுகரான இவருக்கு திருமணமாகவில்லை. ஞாயிற்றுக்கிழமை மாலை நெய்வேலி சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அன்றிரவு மந்தாரக்குப்பம் தபால் நிலையம் அருகே சுப்பிரமணியன் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த மாவட்ட எஸ்பி விஜயகுமார், நெய்வேலி டிஎஸ்பி வெங்கடேசன் மற்றும் மந்தாரக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
பின்னர் சுப்பிரமணியன் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுப்ரமணியன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தம்பி ராதாகிருஷ்ணன் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.