ஊராட்சி செயலருக்கு ஆதரவாக கிராம மக்கள் ஆ.அருண்மொழிதேவன் எம்.பி.யிடம் மனு அளித்தனர்.
கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம், கூனாங்குறிச்சி ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை திட்டக்குடியில் கடலூர் தொகுதி எம்பி ஆ.அருண்மொழிதேவனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கூனாங்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்த பழனிவேல் அண்மையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை. மேலும் 100 நாள் வேலைத்திட்டம், சாலைப் பணிகள், குடிநீர் உள்பட்ட அனைத்து பிரச்னைகளையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுகண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென மனுவில் வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராமமக்கள் கலைந்துசென்றனர்.