பாரம்பரிய நெல் ரகங்களைக் காட்சிப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பண்ருட்டியைச் சேர்ந்த கவிதை கணேசனுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.
பண்ருட்டியை அடுத்துள்ள எல்.என்.புரம் ஊராட்சி, முத்தையா நகரில் வசிப்பவர் கவிதை கணேசன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மேலாளராக (தரக் கட்டுப்பாடு) பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், பாரம்பரிய நெல், காய்கறி விதைகளைச் சேகரித்து வருகிறார். மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாரம்பரிய விதைகளைக் காட்சிப்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த 17,18- ஆம் தேதிகளில் திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா நடைபெற்றது.இதில் பாரம்பரிய நெல் விதைகளில் 300 வகைகளை கவிதை கணேசன் காட்சிப்படுத்தியிருந்தார். பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக கணேசனுக்கு நம்மாழ்வார் விருதை தமிழ்நாடு அரசு உணவு வழங்கல் ஆணையர் மதுமதி வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், புதுச்சேரி அரசு விவசாயச் செயலர் மணிகண்டன் ஆகியோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோளின்படி கணேசன் 200 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை அப்துல்கலாம் விஞ்ஞான மையத்தில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.