பூரண மதுவிலக்கு விழிப்புணர்வு பிரசாரபயணக் குழுவினர் திங்கள்கிழமை கடலூர் வந்தடைந்தனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி சுமார் 50 இயக்கங்கள் அடங்கிய நேர்மை அணியினர் கடந்த 23- ஆம் தேதி அரியலூரில் வாகன விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினர். இக் குழுவினர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) விருத்தாசலத்தில் பயணத்தை நிறைவு செய்யும் வகையில் ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் வழியாக திங்கள்கிழமை கடலூர் வந்தடைந்தனர். கடலூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நகர அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், பிரசாப் பயணத்தில் பங்கேற்ற ஆர்.தனசேகரன், என்.ராமமூர்த்தி, ஏ.பி.கீதா, வி.சுந்தர் ஆகியோர் தங்களது பயண அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். குழுவில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் கெளதமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 50 அமைப்பினர் ஒன்றிணைந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி 5 நாள்கள் பிரசார விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் மதுவினால் 5 லட்சம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர். வருகிற அக்.2- ம் தேதிக்குள் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும். இல்லையெனில் ஜல்லிக்கட்டுக்கு நடைபெற்றதைப் போல பெரும் போராட்டம் நடைபெறும் என்றார். காந்திய சமதர்ம இயக்க நிர்வாகி தி.சிவஞானசம்பந்தம் பேசினார்.
தமிழ்நாடு லோக்பால் கூட்டமைப்புத் தலைவர் இரா.நடராசன், செயலர் இரா.அப்பாசி, வளமான தமிழகம் கட்சித் தலைவர் பி.சரவணராஜா, லோக்பால் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் டி.இ.சித்திரகலா, சி.கே.ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி நன்றி கூறினார்.