பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.வி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். செயலர் வி.திருமுருகன் வரவேற்றார்.
இதில், மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு அழகியநத்தம், வான்பாக்கம், சன்னியாசிபேட்டை, விலங்கல் பட்டு, திருமாணிக்குழி, அக்கடவல்லி ஆகிய இடங்களில் மணல் எடுக்கும் வகையில் குவாரி அமைத்துத் தர வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்துள்ள மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும், மாவட்டத்தில் ஏற்கெனவே இயங்கி வந்த எலந்தம்பட்டு, வசிஸ்டபுரம், இறையூர் உள்ளிட்ட 17 குவாரிகளைப் புதுப்பித்து மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட சிஐடியூ செயலர் பி.கருப்பையன், மாவட்ட நிர்வாகிகள் வி.கிருஷ்ணமூர்த்தி, வி.அனந்தநாரயணன் ஆகியோர் பேசினர். துணைத் தலைவர் எஸ்.பொன்னம்பலம் நன்றி கூறினார்.