வழக்குரைஞர் மீது தாக்குதல்: சகோதரர்கள் மூன்று பேருக்கு 2 ஆண்டு சிறை
பண்ருட்டியில் வீடு புகுந்து வழக்குரைஞரைத் தாக்கிய வழக்கில், சகோதரர்கள் மூன்று பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 1,000 அபராதம் விதித்து பண்ருட்டி நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
பண்ருட்டி வட்டம், பெரிய எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஏழுமலை, கந்தசாமி பிள்ளை மகன் பாலமுருகன். மாடுகள் வாங்கி விற்பனை செய்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையே 12.9.2001 அன்று தரகு பணம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதனை, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.
இதனால், ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் விஜயராஜ், பாலமுருகன், கொளஞ்சி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தி வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் வழக்குரைஞர் சிவசிதம்பரம் பலத்த காயமடைந்தார்.
இதுதொடர்பான வழக்கு பண்ருட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி டி.கணேஷ், சகோதரர்கள் மூன்று பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 1,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.