கடலூர் மாவட்டத்தில் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட எஸ்பி செ.விஜயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு வருகிற 21-ம் தேதி நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் இந்தத் தேர்வை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் எஸ்பி பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் இத்தேர்வு 8 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு நடைபெறும் கடலூர் புனித அன்னாள் பள்ளி, மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி, எஸ்.குமாரபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உடற்பயிற்சி கல்லூரி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வினை மொத்தம் 27,501 பேர் எழுதுகின்றனர். இதில், 22,657 ஆண்களும், 4,844 பெண்களும் எழுதுவதற்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும் என்றபோதிலும் 9 மணிக்கே தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்கு வர வேண்டும். நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனைப் பேனா மற்றும் பரீட்சை அட்டை கொண்டு வர வேண்டும். செல்லிடப்பேசி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை என்றார்.
மேலும் சிறப்பு பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.