கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக வெயில் சதமடித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
கடற்கரையோர மாவட்டமான கடலூரில் வழக்கமாக கோடை காலத்தில் வெயிலின் அளவு அதிகமாக இருந்தாலும், வெப்பத்தின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கடலூரை வாட்டியெடுத்த வெயில், அக்னி நட்சத்திரம் பிறந்ததிலிருந்து மேலும் தீவிரமடைந்தது.
3 ஆண்டுகளில் அதிகம்: கடந்த 14-ஆம் தேதி மாவட்டத்தில் 100.58 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஆனால்
15-ஆம் தேதி அதிகபட்ச அளவாக 107.06 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை 103.28 டிகிரி பாரன்ஹீட்டும், புதன்கிழமை 106.87 டிகிரி பாரன்ஹீட், வியாழக்கிழமை 107.42 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப்பம் பதிவானது. இது கடந்த
3 ஆண்டுகளில் மே மாதத்தில் பதிவான வெயில் அளவில் அதிகபட்சமாகும்.
இவ்வாறு கடந்த 5 நாள்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயிலின் அளவு பதிவாகி வருவதால் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாகவே உள்ளது.
அனல் காற்றால் தவிப்பு: குறிப்பாக மதிய நேரத்தில் வீசும் அனல் காற்றானது, சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்வோரது முகத்தில் படும்போது அவர்கள் அதிகமான வேதனையை சந்திக்கின்றனர். இதனால் நண்
பகல் 12 மணி முதல் மாலை 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை கூடிய மட்டும் தவிர்த்து வருகின்றனர். அதேநேரத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக இயற்கை பானங்களையும், குளிர்பானங்களையும் பொதுமக்கள் நாடுகின்றனர். அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் தாக்கம் தொடரும் என்பதால் மக்கள் மத்திய நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயங்கி விழுந்த பெண்: பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த மூதாட்டி, வெயிலின் தாக்கத்தால் வியாழக்கிழமை மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவருக்குக் குடிநீர் வழங்கி மயக்கத்தைத் தெளிய வைத்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் மழை, வெயிலுக்கு ஒதுங்கி நிற்கக்கூட இடமில்லை. குடிநீர் வசதிகூட செய்துதரப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.