பண்ருட்டி நகராட்சியில் குடிநீர் குழாய் இணைப்பில் விதிமீறி பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களை ஊழியர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் சுமார் 75 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, நேரடி நீர்உந்து நிலையம் மூலம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.
தற்போது கடுமையான வறட்சி நிலவும் சூழலில், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிலர் குடிநீர் குழாயில் மின் மோட்டார் பொருத்தி விதிமீறி தண்ணீரை உறிஞ்சுவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெங்கடாசலம் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, ஓவர்சீஸ் ராமன் தலைமையில் ஊழியர்கள் நகராட்சியில் குடிநீர் இணைப்புகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, சில இடங்களில் குடிநீர் குழாயில் மின் மோட்டார்கள் பொருத்தியிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக 7 மின் மோட்டார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.