சிதம்பரத்தில் இரு நாள்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
சிதம்பரம் நகராட்சி மக்களின் தேவைக்காக, வக்காரமாரி நீர்த் தேக்கத்திலிருந்தும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாகவும், தண்ணீர் கொண்டு வரப்பட்டு மேலரதவீதி, கனகசபை நகர் மற்றும் மானாசந்து ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் தேக்கி வைத்து அனைத்துப் பகுதி மக்களுக்கும் காலை வேளை மட்டும் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடும் வறட்சியால் வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் உள்ள குளங்கள் வற்றின. இதனால் ஆழ்துளைக் கிணறு அமைத்து சிதம்பரம் மேல ரதவீதி மேல்நிலைத் தொட்டியில் நீரேற்றி விநியோகம் செய்யப்பட்டு வந்நதது.
தற்போது ஆழ்துளை கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த புதன், வியாழக்கிழமை என இரு நாள்கள் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பழுதை சீரமைத்து, சீராக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.