புதுவை அமைச்சரின் உதவியாளர் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை கடலூர் மாவட்ட போலீஸார் குண்டர் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்தனர்.
புதுவை மாநில சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமியின் உதவியாளராக செயல்பட்டு வந்தவர் பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்த வீரப்பன். இவர் கடந்த ஏப்.5-ஆம் தேதி கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலையத்துக்குள்பட்ட பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் பைக்கில் சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த ரெட்டிச்சாவடி போலீஸார் 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்குத் தொடர்பாக சூர்யா, அன்பு என்ற அன்பரசன் ஆகியோர் ஏற்கெனவே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதுவை, கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் புகழ் என்ற புகழேந்தி (22) (படம்) என்பவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இவர்மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது குற்றச் செயல்களை தடுத்திடும் தடுப்புக் காவலில் கைது செய்வதற்கான ஆணையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் வழங்கினார்.
புகழேந்தி ஏற்கெனவே கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் அவரிடம் வழங்கப்பட்டது.