கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் சிறுவன் உள்பட இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மனைவி விஜயபாரதி (30). இவரது தந்தை பாண்டியன் காட்டுமன்னார்கோவிலில் வசித்து வருகிறார். விஜயபாரதி கோடை விடுமுறைக்காக வியாழக்கிழமை தனது மகள் அனிஷா (8), மகன் சிவசர்மா (6) ஆகியோருடன் தந்தை பாண்டியன் வீட்டுக்கு தனது காரில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். காரை அதே பகுதியைச் சேர்ந்த பாவாடை (62) ஓட்டினார்.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், காங்கிருப்பு என்ற இடத்தில் கார் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் கார் ஓட்டுநர் பாவாடை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விஜயபாரதி, அனிஷா, சிவசர்மா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே சிறுவன் சிவசர்மா உயிரிழந்தார்.
தீவிர சிகிச்சைக்காக தாயும், மகளும் புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து குமராட்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.