மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள நடைமுறையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என முன்னாள் மேலவை உறுப்பினரும், கல்வியாளருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்: அண்மையில் நடைபெற்ற "நீட்' தேர்வு எழுதிய மாணவர்களிலிருந்து, மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் ஆகிய இரு வகையினருக்கும் விகிதாச்சார அடிப்படையில், குஜராத் மாநிலத்தில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுவது போல் தயாரித்து அனுமதி சேர்க்கை வழங்க வேண்டும். மொத்தமுள்ள எம்பிபிஎஸ் இடங்களில் நீர் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் இருந்து, மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 75 சதவீத இடங்களும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களும் ஒதுக்கப்பட்டு, அந்த மாநிலப் பட்டியலின் படி மருத்துவப் படிப்புக்கு அனுமதி சேர்க்கை குஜராத் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மொத்தமுள்ள எம்பிபிஎஸ் இடங்களில் 15 சதவீதம் தேசிய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டு, மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மேற்கண்ட முறைப்படி அனுமதி சேர்க்கை குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த ஒதுக்கீடு அளவீடு (3:1) செயல்படுத்தப்படுவதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இந்த அளவு கோல் மூலம் மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கும், எம்பிபிஎஸ் அனுமதி சேர்க்கையில் உரிய நீதி வழங்கப்படுகிறது.
எனவே, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும் உரிய நீதி வழங்கும் பொருட்டு தமிழ்நாட்டிலும், குஜராத் அளவு கோல் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.