காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, பண்ருட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலர் கே.தனபால் தலைமை வகித்தார். எஸ்.கே.ஏழுமலை, டி.ஜெகதீசன், எஸ்.பகத்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், வி.உதயகுமார் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். சி.ராதாகிருஷ்ணன், வி.பூர்வச்சந்திரன், கே.வடமலை, ஏ.பன்னீர், பி.குமரகுருபரன், கே.சேகர், பி.ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பண்ருட்டி வட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு தாமதமின்றி அமைக்க வேண்டும். கிராமப் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி தூர்வார வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு அளிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்துகொண்டனர்.