தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சிவ.மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வருகிற 22-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளாக நடைபெறுகிறது. அதன்படி 22-ஆம் தேதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், ஒன்றியத்துக்குள் பொது மாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம், பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.
23-ஆம் தேதி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. 24-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 25-ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்துக்குள் பொதுமாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியத்துக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
26-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
29, 30 ஆகிய தேதிகளில் இடைநிலை ஆசிரியருக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.