கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 50 ரெளடிகளை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் கடலூர் மாவட்ட எல்லையில் கொலையானவரின் தலையை காவல் நிலையத்தில் வீசுதல், திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
எனவே குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு ஒரே நாளில் வாகன தணிக்கை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்காணித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி வெள்ளிக்கிழமை 50 ரெளடிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் அனுக்கம்பட்டு கிளிண்டன் பிரபு, மாளிகைக்கோட்டம் சுவீட்லின், அண்ணாமலை நகர் தேவா, மண்ரோடு கட்டை கிருஷ்ணன், வடக்கிருப்பு கொக்கிகுமார், விருத்தாசலம் டயர்வண்டி வேலு, குள்ளரவி, தர்மராஜ், சூரியபிரகாஷ், வீரச்செல்வம், கோட்டான் என்ற ராஜேசகர், மணிகண்டன், சேத்தியாத்தோப்பு மாடுமுட்டி ஜான்பீட்டர், குள்ளப்பட்டி பிரகாஷ், பிரபு, சீனிவாசன், கட்டையன், கொண்டசத்திரம் சேகர், கடலூர் பிள்ளையார்மேடு விக்னேஷ், பீமாராவ்நகர் வேலாயுதம், மஞ்சக்குப்பம் தண்டபாணி, குப்பன்குளம் சந்துரு, பாலமுரளி, வடமூர் மணிகண்டன், மோகன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களது நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.