மாவட்ட யோகா போட்டி

கடலூரில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் குறைவான போட்டியாளர்களே பங்கேற்றனர்.

கடலூரில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் குறைவான போட்டியாளர்களே பங்கேற்றனர்.
 இந்தியாவில் யோகாவை வளர்க்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக யோகாவை விளையாட்டுப் பட்டியலில் சேர்த்து போட்டியாக நடத்தி வருகிறது. அகில இந்திய அளவிலான யோகா போட்டியை நடத்தும் வகையில் மாவட்ட அளவிலான போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
 இதன்படி பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான யோகா போட்டி கடலூரில் அண்ணா விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போட்டிக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ரா.அன்பழகன் தலைமை வகித்தார். இதில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மற்றும் 9, 10-ஆம் வகுப்பினருக்கு என பிரிக்கப்பட்டு மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் மொத்தம் 10 பள்ளிகளிலிருந்து 80 பேர் பங்கேற்றனர்.
 இதில் தேர்ச்சி பெறுவோர் தலா 2 பிரிவுகளிலிருந்து தலா 2 பேர் வீதம் திருச்சியில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் புதுதில்லியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பார்கள்.
போட்டியாளர்கள் குறைவாகப் பங்கேற்பு: இந்தப் போட்டி குறித்து மாவட்டத்தில் போதுமான அளவில் மாணவ, மாணவிகளிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. முக்கியமாக கடலூரில் உள்ள பள்ளிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்றன. மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்து ஒரு பள்ளிகூட பங்கேற்காதது குறித்து யோகா ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com