கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே பட்டா மாற்றத்துக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கிராம நிர்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
நெய்வேலியைச் சேர்ந்தவர் கபிரியேல். இவர் குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்கு மேலூரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரிடம், வடக்கு மேலூர் கிராமத்தைச் சேர்ந்த என்எல்சி சொசைட்டி தொழிலாளி பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் வீட்டுமனைப் பட்டா மாற்றம் தொடர்பாக விண்ணப்பித்தனர். ஆனால், பட்டா மாற்றம் செய்துதர தலா ரூ.5 ஆயிரம் வீதம் 3 பேரும் மொத்தம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என கபிரியேல் கூறினாராம். இதுகுறித்து மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுகளை கபிரியேலிடம் வெள்ளிக்கிழமை அவரது அலுவலகத்தில் பாலசுப்பிரமணியம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கபிரியேலை கைது செய்தனர்.