சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறவும், சமர்ப்பிக்கவும் மே 26 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லூரி முதல்வர் கே.முருகேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியுள்ளதாவது:
முதலாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 5ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது.
அன்று சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அனைத்து இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கும், 6ஆம் தேதி பிஏ ஆங்கில இலக்கிய பாடப் பிரிவுக்கும், 7ஆம் தேதி பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், பொது வேதியியல், கணினி அறிவியல், பிசிஏ., கணினி பயன்பாட்டியல் பாடப் பிரிவுகளுக்கும், 8ஆம் தேதி பி.எஸ்சி தொழில் வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும், 9ஆம் தேதி பி.காம் மற்றும் பிபிஏ, பாடப் பிரிவுகளுக்கும், 12ஆம் தேதி பி.ஏ. பொருளியல் மற்றும் தமிழ் இலக்கிய பாடப் பிரிவுகளுக்கும் முதலாவது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் விவரம் தகவல் தொகுப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வுத் தொடர்பாக தனித் தனியே எவருக்கும் தகவல் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.